Skip to content
//அனைத்து காலனியாதிக்கத்துக்கு உட்பட்ட பண்பாடுகளுக்குமான குரலாக அன்று காந்தியின் குரல் எழுந்தது – இன்றைக்கு நூறு ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த பாரதம், இன்றைய பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருக்கும் பாரதத்தைக் காட்டிலும் கல்வி அறிவில் மேம்பட்டது என நிச்சயமாகக் கூறலாம். இதே சூழ்நிலை, பர்மாவுக்கும் பொருந்தும். ஏனெனில், பிரிட்டிஷ் நிர்வாகிகள் பாரதம் வந்தபோது, இங்கிருந்த அமைப்புகளை மேம்படுத்துவதற்குப் பதிலாக, அதை அப்படியே எடுத்து அதனை வேருடன் பிடுங்கி எறிய ஆரம்பித்தார்கள். மண்ணைத் தோண்டி வேரைப் பிடுங்கினார்கள். .. 1818-ல் மராட்டியப் பேரரசு வீழ்ந்தது. 1819-ல், பேஷ்வா அரசு இருந்த பிராந்தியங்களில் அனுப்பப்பட்ட பிரிட்டிஷ் அறிக்கை கூறுகிறது – ஐரோப்பிய நாடுகளைக் காட்டிலும், இந்தியாவில் எழுதப் படிக்க, கணக்கு வழக்குகளைச் சரிபார்த்து வைத்துக்கொள்ளத் தெரிந்த மக்களின் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கிறது. (Dharampal, The Beautiful Tree, Other India Press, 1983:2000, p.375). 1821-ல், தானே மாவட்டத்தில் கணக்கெடுத்த திரு. ப்ரெண்டர்காஸ்ட் என்கிற கிழக்கிந்திய கம்பெனி அதிகாரி எழுதுகிறார் – நாம் ஆக்கிரமித்துள்ள பிராந்தியத்தில், ஒரு கல்விச்சாலையாவது இல்லாத ஒரு சிறிய கிராமம்கூட இல்லை. பெரிய கிராமங்களிலோ பல கல்விச்சாலைகள் இருக்கின்றன. நகரங்களிலோ, மிகவும் திறமையான முறையில் எல்லா இடங்களிலும் இளம் சிறார்கள் கல்வி பயில்கிறார்கள். கணக்கு வழக்குகளைத் திறமையாகக் கவனித்துப் பேணத் தெரியாத ஒரு விவசாயியையோ சிறுவர்த்தகரையோ காண முடியவில்லை. நம் நாட்டில் உள்ள இதே தரத்தில் வாழும் மக்களைக் காட்டிலும், இவர்கள் சிறப்பாக எழுத்தறிவும் எண்ணறிவும் பெற்றிருக்கிறார்கள். உயர் வியாபாரிகளோ, எந்த பிரிட்டிஷ் வியாபாரிக்கும் சமமான அறிவு பெற்றிருக்கிறார்கள். (Dharampal, The Beautiful Tree, Other India Press, 1983:2000). … மெக்காலே, திட்டமிட்டு இந்தியாவை நாசமாக்க இதைச் செய்யவில்லை. அப்படி செய்ததாக இணையத்தளங்களில் உலவும் ஒரு meme, உண்மையில் பொய்யானது. இது பொய்யான தகவல் என கண்டுபிடித்துக் கூறியவர்களில் இந்துத்துவர்கள் முக்கியமானவர்கள். உதாரணமாக கொயன்ராட் எல்ஸ்ட். இந்த மேற்கோளை அப்துல் கலாம்கூட தன் உரையில் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால், மெக்காலே இதைத் திட்டமிட்டு செய்ததாக ஒரு எண்ணம், தொடக்கக் காலம் முதலே நிலவி வந்திருக்கிறது. ஆனால், மெக்காலே இதை இந்தியர்களை நாசமாக்க வேண்டுமென்று திட்டமிட்டுச் செய்யவில்லை என முதன்முதலில் சொன்னவர் காந்திதான். அதே நேரத்தில், மெக்காலே கல்வி முறை அகற்றப்பட்டு ஒரு சுதேசி கல்வி முறை இந்தியாவுக்கு வர வேண்டும் என்பதில் தாத்தா தெள்ளத்தெளிவாக இருந்தார். அவர் சொன்னார் – ‘மெக்காலே தீமை செய்ய வேண்டும் என்கிற நோக்கத்தில் செய்யவில்லை. ஆனால், அவர் கொண்டுவந்த ஆங்கிலக் கல்வி முறை, நம்மை அடிமைகளாக்கிவிட்டது’.